Monday, December 10, 2007

சுவடுகள்-II


முதல் நாள் கல்லூரி... வரப்போகும் நான்கு வருட பாதையை இன்று முதல் தொடங்க போகிறேன்.
கல்லூரி வாசல் நுழையும்போதே ஒரு வித பயம் கலந்த பரவசம் மனதில், அன்று முதல் நாள் என்பதால் காலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அனைவரின் பெயர் வரிசை பார்த்து வகுப்பறைகள் பிரிக்கப் பட்டிருந்தது. அதனால் என் பள்ளி நண்பர்களெல்லாம் வேறு ஒரு பிரிவிற்கு நான் வேறு பிரிவிற்கு செல்ல வேண்டியதாயிற்று. என் பெயர் C section அட்டவணையில் ஒட்டியிருப்பதை பார்த்தேன். அதில் எனக்கு தெரிந்தவர்கள் எவருமில்லாமல் நீண்டு கொண்டே சென்றது. கடைசியில் என் வீட்டருகினில் இருக்கும் மற்றொரு நண்பன் பெயரும் இருந்தது. முதல் ஆண்டு எல்லோருக்கும் ஒரே பாடம் என்பதால் அனைத்து department மாணவர்களும் ஒன்றாகவே இருக்க வேண்டிய கட்டாயம். வகுப்பினில் காலடி எடுத்து வைக்கும்போது, எல்லோரும் போல அவ்வளவு சந்தோஷம் என் மனதில் இல்லை, நமக்கு இங்கே யாரையும் தெரியாது, முதல் பெஞ்சில் தெரியாத நண்பன் பக்கத்தில் நான் அமர்ந்தேன், ஆனால் அவன் என்னை சற்றும் கவனிக்காமல் அவன் பள்ளி தோழர்களிடம் மட்டுமே பேசி கொண்டிருந்தான். நான் மட்டும் தனிமையில் எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் அடர்ந்து பெய்து நிற்கும் மழை சத்தத்தை போல பேச்சு சத்தம் குறைந்து கொண்டே வந்தது, Physics Lecturer உள்ளே வருகிறார்.


அவர் தன்னைப்பற்றி அறிமுகம் செய்து முடித்துவிட்டு, எங்களை ஒருவர் ஒருவராக விசாரித்தார். 4 ஆம் மாணவன் நான். நடுக்கத்திலே எழுந்து "I am Kathiravan, from Paul's Hr sec school and my department is Civil Engineering" கொஞ்சம் அமைதியாக சொன்னேன்.இது அந்த பாழாய்ப்போன ஆசிரியருக்கு காதில் விழவில்லை, மீண்டும் சொல் என்றார். அதை மீண்டும் அப்படியே ஒப்பித்துவிட்டு அமர்ந்தேன். அந்த நேரத்தில் அப்படியே வரும் ஒவ்வொரு ஆசிரியர்கும் அதே வாய்ப்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. யாரும் நம் அருகே ஒட்டி வருவதை போல் எனக்கு படவில்லை, நானாகவே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். இப்படியே முதல் நாள் போனது... அன்று மாலை வீட்டுக்கு கிளம்பலாம் என்று வெளியே வரும்போது என் பள்ளி நண்பனின் அப்பா கார் கொண்டு வந்திருப்பதாக சொன்னான். "ஏய் கதிர் வா இதுலே போயிடலாம் வழியிலே drop பண்ணிறேன்" என்று கூற நானும் சென்றேன், உள்ளே என் section சேர்ந்த மற்றொரு நண்பனும் இருந்தான். என்னை பார்த்து "நீ C section தானே sorry பேரு மறந்துபோச்சு" நானும் கதிர் .. கதிரவன் என்றேன், அவனும் "என் பேரு கரண் நான் Mechanical... ". என்று சொன்ன வேளையில் நான் இறங்குமிடம் வந்ததால் வழியிலே இறங்கினேன். அடுத்து அதிக வார்த்தைகள் பறிமாறக் கொள்ள முடியவில்லை.

என்னோட முதல் Lab, அதுவும் அது Chemistry lab, எல்லோரையும் 2 நபர்களாக, பிரிய சொன்னார்கள். எல்லோரும் அவரவர் நண்பர்களாய் பார்த்து சேர, நான் தனியாக நின்றேன். நான் தனி ஆளாய் நிற்பதை பார்த்து கரண் "என்ன நீ தனியா நிக்கற, உனக்கு யார் batchmate" என்றான், நான் விழித்ததை பார்த்து "நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாமா "என்றான். நானும் தயக்கமில்லாமல் ஒட்டிக் கொண்டேன். அந்த Lab மட்டுமில்லாமல் Physics, Workshop என அனைத்து Lab நாங்கள் இருவரும் இணைந்தே செய்ய வாய்ப்பு கிடைத்தது. எதாவது கதை அடித்துக் கொண்டே எல்லா lab ம் சென்றது, எங்கள் இருவருக்குள் நட்பின் வேர் துளிர்க்க ஆரம்பித்தது. அவன் இருக்கும் காரணத்தால் நான் எந்த கவலையும் இல்லாமல் என் நாட்களை தள்ளி கொண்டிருந்தேன். அவன் ஆங்கிலம் ஆசிரியரையே அளரடிக்கும், அதை ஆவென்று பார்ப்பதே எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது,ஆனால் அவன் நண்பர்களிடம் பேசும் விதம் அவ்வளவு அருமையாகவும், நகைச்சுவை உணர்வோடு இருக்கும். வாழ்நாள் முழுவதற்குமான நண்பன் எனக்கு கிடைத்து விட்டான் என்று அப்போதே தெரிந்து விட்டது.

ஒரு நாள் phusyics lab ல் நாங்கள் அரட்டையாக ஏதோ ஒரு experiment பண்ணிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் " கதிரவன் உங்ககிட்ட calc இருக்கா" என்றால், யாருடா அது நம்ம பேர ஒரு பொண்ணு voice ல யாரோ கூப்பிடறாங்கனு பார்த்து "calc யா என தலை சொறிந்தேன்" எனக்கு அதற்கான அர்த்தம் புரியவில்லை, கரண் என் தலையிலே போட்டு "அதாண்டா இந்த calculator தான், அவங்க இப்படி சொல்றாங்க, கொடுடா வள்ளல் பிரபுவே" என்று நக்கலாக சொன்னான்."டேய் இங்க calc னு சொல்லுவாளுக, observation இத obsc னு எல்லாத்தையும் சுருக்கி சுருக்கி சொல்லுவாளுக இவளுக, ஆனா அவளுக பேச்ச மட்டும் சுருக்க மாட்டாளுக " என்று அந்த பெண் காதில் சத்தமாக விழும்படியே கூறினான். இதே மாதிரி பல இடத்தில் தலை சொரியவும் அவன் எனக்கு தெளிய வைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. நாட்கள் எல்லாம் வேகமாக கரைய ஆரம்பித்தன. ஒவ்வொரு நாட்களும், வாரமும்,மாதமும் கண்மூடி திறக்கும் வேளையில் முடிந்தது. 2 semester தேர்வும் முடிந்தது, முதலாண்டும் அதன் நாட்களை முடித்துக் கொண்டது.
2 ம் ஆண்டு வேறு இடம் வேறு நண்பர்கள், என்னுடனே இருந்த கரண் வேறு department ல் என யோசித்துக் கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்த போது, கரண் வேகமாக ஓடிவந்து "மச்சான் ஒரு சந்தோசமான செய்தி group change list ஒட்டியிருக்காங்க பார்க்கலையா, உன்ன Mechanical department கு மாத்திட்டங்கடா" என்றான், "அடுத்த மூணு வருஷத்துக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னாத்தான் குப்பை கொட்டனும்" என நகைக்க, மனதில் மகிழ்ச்சி வெள்ளமோட, இருவரும் ஒன்றாக mechanical department போனோம். இங்கே இப்போது புது முகங்கள் புது நண்பர்கள் புது சுற்றம், இருந்தும் பல மாணவர்கள் ஏற்கனவே முதல் ஆண்டில் என்னோடு படித்தவர்களே. எந்த பயமும் இல்லாமல், சற்று அதிகமாகவே பேச ஆரம்பித்து விட்டேன். பொதுவாக Mechanical departmentl அதிகம் பெண்கள் இருக்க மாட்டார்கள், ஆனால் எங்கள் வகுப்பில் 18 பெண்கள், இது எண்ணிக்கையில் சற்று அதிகமே. என் பள்ளியிலே படித்த ஒரு பெண்ணும் இருந்தால்,ஆனால் என்னிடம் அதிகமாக பேசியதில்லை அவள். என் வீட்டருகே அவள் இருந்தாலும் கேட்ட கேள்விக்கு பதில் கூறும் அளவிற்கு இருந்தால் அவ்வளவுதான்.


அப்போது கரண் எனக்கு இன்னொரு நல்ல தோழனை அறிமுகம் செய்தான், கோபு, அவர்கள் இருவரும் ஒரே கல்லூரி பேருந்தில் பயணம் செய்ததில் தொடங்கிய அவர்கள் நட்பு, இருவர் கூட்டணி மூவராக மாறியது. கோபு பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டு பையன் ஆனால் இவன் பவ்யமாக இருந்தாலும், பரம கில்லாடி பெண்களை ஓட்டுவதிலும் தன் பின்னே ஓட வைப்பதிலும். ஆனால் நம்ம கரண் பெண்களிடம் எப்போது cut n right ஆக இருப்பதாலும், அடிக்கடி அவர்களின் மூக்கை உடைப்பதாலும் இவன் பக்கம் ஒரு பெண் தொடர்ந்து 5 நிமிடம் பேசினாலே அது நாங்கள் பெரிய சாதனையாக கருதினோம். எங்கள் மூவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் அதிகமானது, எந்த ஒளிவு மறைவில்லாமல் ஒவ்வொருக்கொருவர் நல்ல புரிதலுடன் நட்பு தொடர்ந்தது.

இவர்களின் நட்பு கிடைக்க ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் சத்தியமாக செய்திருக்க வேண்டும் என எண்ணினேன்.
நான் யாரிடமும் அதிகம் பேசாமல் எனக்கென ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே என் முதல் வருடம் முழுவதியும் முடித்தேன். ஆனால் அதை தொடர என் மனம் விரும்பவில்லை, அதற்கான நல்ல சந்தர்பத்தை எதிர் பார்த்த சமயத்தில், அப்போது junior மாணவர்களுக்காக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் என் வகுப்பு தோழர்கள்,seniors என அனைவரும் இருக்கும் கூட்டத்தில் முதன் முதாலாய் பேசினேன். senior கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சற்று நகைச்சுவையாகவும் கிண்டலுமாக பதில் சொன்னேன். அன்று நான் கலகலப்பாகப் பேசியதிலும், நகைச்சுவையாய் சில கவிதைகள் சொன்னதிலும் அனைவருக்கும் பிடித்தது. அந்த மேடையில் நிற்கும்போது நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அமைதியாக ஒரு புன்முறுவலோடு இதழ்களுக்கே வலிக்காமல் ஒருவள் சிரித்துக் கொண்டிருந்தால். லாவண்யா...என் வகுப்பு தோழி.. பேசும்போதே என் கண்கள் ஒரே திசையில் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது அவளை நோக்கி. இங்கு வந்த ஒரு மாதத்தில் மனதில் நின்றவள்.அந்த வரவேற்பு முடிந்த நேரம் அனைவரும் கலைந்து நேரம் லாவண்யா அருகே வந்து. "கதிர் நீ இப்படிலாம் கூட பேசுவியா? நீ சரியான உம்மனாமூஞ்சினுதானு நினச்சேன், உங்கிட்டேயிருந்து நான் இதெல்லாம் எதி பார்க்கவே இல்ல நல்லா பேசன keep it up " கூறிவிட்டு அடுத்த நொடியே மறைந்து ஓடினாள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை,எனக்கும் மீண்டும் மறு வார்த்தை கூற எதுவும் தோணவில்லை.. பல்லை இளிச்சிகிட்ட்டே ஒரு thanks சொன்னேன்.


அவள் வேறு யாரிடமும் பேசிகூட நான் கண்டதில்லை மனதில் ஓரமாக எங்கேயோ போய் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டது. நாட்களும் வேகமாக கரைந்தன. சற்றே என் நட்பு வட்டம் பெருகியது
செல்வகுமரன்,நந்தகோபால்,கார்த்திகேயன்,தட்சணாமூர்த்தி,ராஜாமணி,லக்ஷ்மிகாந்தன்,உதயா நீண்டு கொண்டே போச்சு. இவர்கள் இருக்கும்
இடத்தில் எங்கள் மூவரை கண்டிப்பாக பார்க்கலாம். அரட்டையுடன் சேர்ந்தே எப்போதும் ஆனந்தமாய் நாட்கள் ஓடின.
இளவரசி, இவள், கோபுவோட batch mate, அதனால் கோபு lab வகுப்புகளை எப்போதும் விரும்பி எதிர் பர்த்துகொண்டிருப்பான். அப்போதானே இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்க முடியும். சில நேரங்களில் நாங்கள் எங்கே என்று தேட ஆரம்பித்தால் பையன் இளவரசியிடம் நாட்டு நடப்புகளை பேசி கொண்டிருப்பான் என்று நாங்களே புரிந்து கொள்வோம். எப்போதும் போல நாங்கள் 2 பேரும் lab ல் நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான், அவனாவது வாழட்டும்டா,என்று ஆசிர்வதித்து எங்கள் வேலையை பார்ப்போம்.
இரண்டாம் ஆண்டும் வேகமாக ஓடியது, ஓய்வில்லாமல். அவ்வப்போது எப்படியாவது நம்மிடம் முதலில் தானாக வந்து பேசிய லாவண்யாவிடம் ஒரு வார்த்தை பேச வேண்டுமென மனம் அலறிக் கொண்டே இருந்தது.அவளின் நட்பை நாட என் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவளை பற்றி என் பள்ளி தோழியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அவள் கேரளாவை சேர்ந்தவள் என்று மட்டும்தான் எனக்கு அவளிடமிருந்து தெரிந்தது. எனக்கோ ஒரே குழப்பம் "நம்மகிட்ட அன்னிக்கு நல்லா தமிழ் பேசனாலே, அப்பறம் எப்படி" என்று மண்டையை எனக்குள்ளே பிய்த்துக் கொண்டேன்.


இதை என் நண்பர்களிடம் கேட்டால் என்னை ஒட்டியே தள்ளி விடுவார்கள். இப்போது இருக்கும் வரிசையின் படி நான்,கரண்,லாவண்யா... என தொடர்ந்தது.. நம்ம கோபுவோட வழிய follow பண்ணலாம்னு பார்த்தா Lab ல் நான்கு நான்கு பேராக பிரித்தால் அவள் வேறொரு batch போக வேண்டியதாயிற்று. ஒரு வார்த்தை பேச வாய்ப்பே இல்லாமல் போனது.. அப்படி ஒரு அமைதியையும் அடக்கத்தையும் தன்னுள்ளே வைத்திருந்தாள்.ஆனால் எங்கு பார்த்தாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு இருப்பாள். யாரிடமும் வீண் பேச்சு பேசாமல் கல்லூரி முடிந்த பின் அடுத்த நொடியே ஹாஸ்டலுக்கு பறந்து செல்வாள். மீண்டும் செமஸ்டர் தேர்வு அது இது என்று மனம் ஒரிடமில்லாமல் சிதறியதால், அதற்குப் பிறகு எனக்கும் அவளைப் பற்றி துருவ மனம் போகவில்லை.
யோசிக்கவும் நேரமில்லை, என் பாதையில் நடக்க ஆரம்பித்தேன்.
இரண்டாம் வருடமும் தன் கணக்கை முடித்துக் கொண்டது. மூன்றாம் வருடம் ஆரம்பம். ஆரம்பமே நான் எதிர் பார்க்காதது எல்லாம் நடந்தது.


(தொடரும்)...

என்றும் அன்புடன்
கருணா

No comments: