Wednesday, July 18, 2007

தபூசங்கரின் 'தேவதைகளின் தேவதை'


இந்த 'தேவதைகளின் தேவதை' ஆனந்தவிகடனில் வந்த
கவிதைகளின் தொகுப்பு...
அவற்றில் சிலவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தாய் தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல் உன்னை எனக்குக் காட்டியது

எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம்
உட்கார்ந்திரு
போதும்!

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தை எல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!
ஒரேயொரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்!
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப்

பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.

கர்ப்பக் கிரகம்
தன்னைத் தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா
என்ன?
நீ சொம்பில் நீரெடுத்துத்
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்
என்னை நானே!

நீ யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்செத்துவிடத் தோன்றியது.

நான் உன்னைக்
காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்து விடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது!


அன்புடன்
கருணா

No comments: